புதுதில்லி:
‘பாங்க் ஆப் பரோடா’ (Bank ofBaroda - BoB) நவம்பர் 1 முதல் தனது வாடிக்கையாளர்களின், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
நடப்புக் கணக்கு - ஓவர் டிராஃப்ட் - சி.சி-யிலிருந்து அடிப்படைக் கிளை, உள்ளூர் அடிப்படைஅல்லாத கிளை மற்றும் வெளிநிலைக் கிளை மூலம் மாதத்திற்கு 3 முறை பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதற்குக் கட்டணம் இல்லை. ஆனால், நான்காவது முறையிலிருந்து, ஒவ்வொரு முறை பரிவர்த்தனை மேற்கொள்ளும்போதும் ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 1 லட்சம் ரூபாய்க்குமேலான டெபாசிட்-களுக்கும் ரூ.1000-க்கு ரூ. 1 விகிதம் கட்டணம் விதித்துள்ளது.
இந்நிலையில், “வணிகமற்ற நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ஐசிஐசிஐ (ICICI Bank) வங்கி அறிவித்துள்ளது.அதாவது, விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை பண இயந்திரத்தை பயன்படுத்த வாடிக்கையாளர்களி டமிருந்து ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது. இந்த நடைமுறையை ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆகஸ்ட் 1முதலே துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.